தோட்டக்கலை மானிய திட்டத்தில் தொட்டி அமைக்க ரூ.75,000 போதாது பழவேற்காடு சரணாலயத்தில் இரை தேடும் பறவைகள் விவசாயிகள் புகார்
திருவாலங்காடு, விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் தொட்டி அமைப்பதற்கான, தேசிய தோட்டக்கலை இயக்க மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 75,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த திட்டத்தை நிறுத்தி விட்டு, இத்திட்டத்தை கொண்டு வந்தது எவ்வித பயனையும் அளிக்காது என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு, நெல், வாழை, பூ, சிறுதானியங்கள் என, 2.50 லட்சம் ஏக்கரில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்துக்காக ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், அவற்றை நேரடியாக சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்த முடியாது. எனவே, அவற்றை நீர் தொட்டி அல்லது நீர் குட்டையில் சேமித்து, அதிலிருந்து சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது. இந்த துணைநீர் மேலாண்மை நடவடிக்கை (எஸ்.டபிள்யூ.எம்.ஏ.,) திட்டத்தில், நிலத்தடி நீர் தொட்டி கட்ட மானியம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில், தொட்டி கட்ட 40,000 ரூபாயும், குழாய் அமைக்க 10,000 ரூபாயும், பம்ப் செட் பொருத்த 15,000 ரூபாய் என, மொத்தம் 65,000 ருபாய் வழங்கப்பட்டு வந்தது. ஒரு தொட்டி அமைக்க, 1 கனமீட்டருக்கு 350 ரூபாய் என்ற அடிப்படையில், அதிகபட்சம் 114 கனமீட்டருக்கு மானியம் வழங்கப்பட்டது. இத்திட்டம் இரு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட நிலையில், தேசிய தோட்டக்கலை இயக்க நீர் சேகரிப்பு குட்டை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், அதிகபட்சம் 75,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், 1 கனமீட்டருக்கு அதிகபட்ச செலவினமாக, 125 ருபாய் கணக்கிட்டு, அதில் 50 சதவீத மானியமாக 62.50 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. இந்தத் தொட்டியை பாலித்தீன், சிமென்ட் கொண்டு கட்டலாம் அல்லது களிமண்ணிலும் கட்டலாம். களிமண்ணில் கட்டுவதற்கு, மானியம் 30 சதவீதம் குறைவாக வழங்கப்படும். இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது: சிமென்ட் தொட்டி கட்ட கன மீட்டருக்கு 1,200 ரூபாய்க்கு மேல் செலவாகும். ஏற்கனவே வழங்கிய 350 ரூபாய் மானியமே போதாது. அதை உயர்த்த வேண்டும் எனக்கோரி வந்தோம். தற்போது, அந்த மானியத்தில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்படுவது ஏற்புடையதல்ல. பாலித்தீன் தொட்டிக்கும், சிமென்ட் தொட்டிக்கும் ஒரே அளவு மானியம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. இந்த தொகையை வைத்து குழி கூட தோண்ட முடியாது. பாலித்தீன் தொட்டி நிரந்தர தீர்வல்ல. வெயில், நாய், எலி, காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றால் விரைவில் சேதமடைந்து விடும். நான்கு ஆண்டுகளுக்குக் கூட தாக்குப்பிடிக்காது. தற்போது கிடைக்கும் மும்முனை மின்சார அடிப்படையில், 12 லட்சம் லிட்டர் நீரை தேக்க, மணிக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்க வேண்டும். இதன் அடிப்படையில், மணிக்கு 5,000 லிட்டர் தண்ணீர் தான் கிடைக்கும். எனவே, இத்திட்டத்தின் விதிமுறைகளை மாற்றி, கன மீட்டருக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரி கூறுகையில், 'விவசாயிகள் பலரும், இதுகுறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.