அனல்மின் நிலைய குடியிருப்பில் விஷ ஜந்துக்கள் உலாவால் பீதி
எண்ணுார், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் உலாவால், குடியிருப்பு மக்கள் பீதியடைந்துள்ளனர். எண்ணுாரில், கத்திவாக்கம் மேம்பால பகுதியில் அனல்மின் நிலைய குடியிருப்பு - 3 அமைந்துள்ளது. இதில், 150க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இங்கு, அனல்மின் நிலைய ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். ஒருபுறம், குடியிருப்பில் உள்ள வீடுகள் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, வசிக்க லாயக்கற்ற நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. மறுபுறம், குடியிருப்பு முழுதும், 3 - 4 அடி உயரத்திற்கு செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன. மேலும், கருநாகம் உட்பட கொடிய விஷமுள்ள பல்வேறு வகையிலான பாம்புகளும் சுற்றித் திரிகின்றன. சில நேரங்களில் கழிப்பறை, ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் நிலைமை மோசமாகி விடுகிறது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வருவதற்குள் பாம்பு மாயமாகி விடுகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.