குறைவான பேருந்துகள் இயக்கம் சாகச பயணம் செய்யும் மாணவர்கள்
திருவள்ளூர்:திருவள்ளூரில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், மாணவர்கள் படியில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூர் திரு.வி.க., பேருந்து நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை, பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்துார், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.ஏராளமான கிராமங்கள் அடங்கிய இப்பகுதியில் இருந்து வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கிராமவாசிகள் அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர்.காலை - மாலை நேரங்களில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.குறிப்பாக, திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, மாலை நேரத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால், வீட்டிற்கு செல்வோர், வேறு வழியின்றி படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால், அவ்வப்போது விபத்து ஏற்பட்டு, காயம் மற்றும் உயிர்பலி போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றனர்.எனவே, திருவள்ளூரில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.