உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்நிலைகளில் குவியும் குப்பை கழிவுகள் தடப்பெரும்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

நீர்நிலைகளில் குவியும் குப்பை கழிவுகள் தடப்பெரும்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

பொன்னேரி: தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், நான்கு நாட்களாக குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் குவிந்து கிடப்பதால், நீர்நிலைகள் பாழாவதுடன், மக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 5,000 குடியிருப்புகளில் இருந்து தினமும், 10,000 - 12,000 கிலோ குப்பை வெளியேற்றப்படுகிறது. இவற்றை கையாள்வதற்கு என, தனி இடம் இல்லாத நிலையில், பொன்னேரி நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. நான்கு நாட்களாக அங்கு கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதிக்காத நிலையில், குப்பை கழிவுகள் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் தேங்கி வருகிறது. இதனால், நீர்நிலைகள் பாழாகி வருவதுடன், கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்பு மக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நான்கு நாட்களாக குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. வீடுகளில் இருந்தும் சேகரிப்பதில்லை. துாய்மை பணியாளர்கள் தினமும் வந்து பணியின்றி திரும்பி செல்கின்றனர். மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளன. நகராட்சி நிர்வகத்திடம் பேசி, தற்காலிக தீர்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும், ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை