உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரட்டை கொலை வழக்கில் கைதான இருவருக்கு குண்டாஸ்

இரட்டை கொலை வழக்கில் கைதான இருவருக்கு குண்டாஸ்

ஊத்துக்கோட்டை:நண்பர்கள் இருவரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் ஊராட்சி, இந்திரா நகர், தெலுங்கு காலனியில் வசித்து வந்தவர்கள் ஆகாஷ், 18, ஜானகிராமன், 19. இருவரும் கடந்த, ஜூன் 22ம் தேதி காணவில்லை என, பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். ஊத்துக்கோட்டை ரோஜா தெருவைச் சேர்ந்த நலம்பாண்டியன், 23 என்பவர், ஜூன் 26ம் தேதி ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், காணாமல் போன வாலிபர்களை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். பென்னலுார்பேட்டை போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்ததில், காணாமல் போன இருவரையும் தன் நண்பன் மணிகண்டன், 22 என்பவருடன் சேர்ந்து கொலை செய்து, ஊத்துக்கோட்டை சார் - பதிவாளர் அலுவலக சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்ததாக கூறினார். இருவரையும் ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்தசுக்லா, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென, கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, நலம்பாண்டியன், மணிகண்டன் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கான நகல் அவர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !