இழப்பீடு வழங்காமல் நெடுஞ்சாலை பணி தாசில்தார் சமரசத்திற்கு பின் கலைந்தனர்
திருத்தணி:சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூரில் இருந்து, திருத்தணி அடுத்த, பொன்பாடி வரை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி நடக்க உள்ளது.தற்போது இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நான்குவழிச் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த கட்டடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு தற்போது தார்ச்சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகின்றன.நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய உரிமையாளர் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.நேற்று, திருத்தணி ஒன்றியம், முருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நபர்கள் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு தங்களுடைய நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், உரிய இழப்பீடு தொகை வழங்காமல் சாலை விரிவாக்கம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி நெடுஞ்சாலை ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி தாசில்தார் மலர்விழி மற்றும் திருத்தணி போலீசார், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நிலம் வழங்கியவர்கள் இடையே சமரச பேச்சு நடத்தினர்.நாளை, மாவட்ட அதிகாரி தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சு நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என, தாசில்தார் தெரிவித்ததையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.