உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னை ஐ.ஐ.டி., அணியினர் நீச்சல் போட்டியில் முதலிடம்

சென்னை ஐ.ஐ.டி., அணியினர் நீச்சல் போட்டியில் முதலிடம்

சென்னை, சென்னையில் நடந்த ஐ.ஐ.டி.,களுக்கு இடையேயான தேசிய நீச்சல் போட்டியில், சென்னை ஐ.ஐ.டி., அணி அதிக புள்ளிகள் பெற்று, முதல் இடத்தை பிடித்தது. ஹைதராபாத் மற்றும் திருப்பதி ஐ.ஐ.டி.,களுடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி., நாட்டில் உள்ள அனைத்து ஐ.ஐ.டி.,களுக்கும் இடையே, 39வது தேசிய நீச்சல் போட்டியை, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடத்துகிறது. இதில், நாட்டின் அனைத்து மாநில ஐ.ஐ.டி., மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி சுற்று கள் நேற்று முன்தினம் நடந்தன. இதன் மகளிர், 50 மீட்டர் 'பேக் ஸ்ட்ரோக்' பிரிவில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆஷ்னா அஸ்வின் மத்துார், போட்டி துாரத்தை 35.46 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். தொடர்ந்து நடந்த 50 மீட்டர் 'பட்டர்பிளை' பிரிவு போட்டியிலும், ஆஷ்னா அஸ்வின் மத்துார், போட்டி துாரத்தை 34.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மகளிர் 100 மீட்டர் 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில், சென்னையின் ஸ்கேர்லெட் எஸ்தர் போட்டி துாரத்தை 1.45.08 நிமிடங்களில் கடந்து, இரண்டாவது இடம் பிடித்தார். அடுத்த நடந்த ஆண்கள் பிரிவு 100 மீட்டர் 'பட்டர்பிளை' பிரிவு போட்டியில், சென்னையின் அயன் அலிகான் போட்டி துாரத்தை 1.04.70 நிமிடங்களில் கடந்து முதல் இடம் பிடித்தார். 50 மீட்டர் 'ப்ரீஸ்டைல்' பிரிவு போட்டியில், சென்னையின் சங்கரசன் பகதுார் ராகுல் போட்டி துாரத்தை, 25.23 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். போட்டி முடிவில், சிறப்பாக விளையாடிய சென்னை ஐ.ஐ.டி., அணி, ஆண்கள் பிரிவில் 48 புள்ளிகளும், மகளிர் பிரிவில் 56 புள்ளிகள் என, மொத்தம் 104 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இரண்டாவது இடத்தில் கவுகாத்தி ஐ.ஐ.டி., அணி 53 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில் ஹைதராபாத் அணி 39 புள்ளிகளுடனும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை