எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா உற்சவம்
கீழ்நல்லாத்துார்:கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா, கடந்த 1-ம் தேதி கங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன துவங்கியது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று பம்பை உடுக்கை உடன் அடிதண்டம், வேப்பஞ்சேலை செலுத்துதல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராடலும், இரவு 9:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எல்லையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.