திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம் வரும் 27ல் புஷ்பாஞ்சலி
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில், மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின், கோவில் அறங் காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் பங்கேற்று, லட்சார்ச்சனை விழாவை துவக்கி வைத்தனர். வரும் 27ம் தேதி காலை சந்தன காப்பு, மாலை 6:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், மறுநாள் காலை 10:00 மணிக்கு உற்சவர் திருக்கல்யாணமும் நடக்கிறது. ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில், சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவில் முருகப் பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரம் பதிலாக புஷ்பாஞ்சலி நடப்பது குறிப்பிடத்தக்கது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்டா ஆறுமுகசுவாமி கோவில் நந்தி ஆற்றின்கரையோரம் உள்ளது. இக்கோவிலில், 12ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று காலை துவங்கியது. நகரி சித்துார் மாவட்டம் நகரி டவுனில் உள்ள கரகண்டீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர் சுவாமி சன்னிதியில், நேற்று முன்தினம் கந்தசஷ்டி விழா துவங்கியது. ஏழு நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது. வரும் 27ம் தேதி மாலை சூரசம் ஹாரம் நடைபெறும்.