எல்லையோர தமிழக போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் இன்றி சட்டம் ஒழுங்கில் சிக்கல்
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஆரம்பாக்கம் பகுதி. ஆந்திரா, ஒடிசா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய வடமாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும், ஆரம்பாக்கம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.கஞ்சா, குட்கா, மணல், செம்மரம், எரிசாராயம் உள்ளிட்டவை மேற்கண்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆரம்பாக்கம் வழியாக தமிழகத்திற்குள் அதிக அளவு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பாக்கம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான மீனவ கிராமங்கள் உள்ளன.தமிழகத்தின் மிக முக்கியமான நுழைவாயிலான ஆரம்பாக்கம் பகுதி உள்ள போலீஸ் நிலையத்தில், ஆறு மாத காலமாக, இன்ஸ்பெக்டர் இல்லை. ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில், மற்றொரு ஆந்திர எல்லையோர போலீஸ் நிலையமான பாதிரிவேடு போலீஸ் நிலையம் உள்ளது.அங்கு ஆந்திர பகுதியான சத்தியவேடு வழியாக, தமிழகத்திற்குள், செம்மரம், மணல், அரிசி போன்ற கடத்தல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த போலீஸ் நிலைய எல்லையில், பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் கொண்ட தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம் உள்ளது.மாநில எல்லையோர இரு போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் இருப்பதால், எல்லை பகுதியில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழக எல்லை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.