சிறுமி பாலியல் வன்கொடுமை வடமாநில வாலிபருக்கு குண்டாஸ்
திருவள்ளூர்,:ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வடமாநில வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த ஜூலை 12ம் தேதி பள்ளியில் இருந்து மதியம் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரயில் நிலையம் அருகே, சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர், சிறுமியை துாக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், ஜூலை 25ம் தேதி ஆந்திராவின் சூலுார்பேட்டை ரயில் நிலையம் அருகே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா, 35, என்பவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் அசாம் மாநில வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்ற கலெக்டர் பிரதாப், பிஸ்வகர்மா ராஜுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை, புழல் சிறைச்சாலை அதிகாரிகளிடம், ஆரம்பாக்கம் போலீசார் நேற்று அளித்தனர்.