வலையில் சிக்கிய மர்ம பொருட்கள் பழவேற்காடில் பரபரப்பு
பழவேற்காடு: கடலுக்கு சென்ற மீனவர் வலையில், மர்ம பொருட்கள் சிக்கியதால், பழவேற்காடில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பழவேற்காடில், புயல் மழையின் காரணமாக மீனவர்கள், கடந்த சில தினங்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரு சில மீனவர்கள் மட்டும் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அதில், அரங்கம் குப்பத்தை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் சிலர், கடலில் வலையை வீசி மீன்பிடிக்கும்போது, வலையில் மர்ம பொருட்கள் சில சிக்கின. அவற்றை வலையில் இருந்து எடுத்து படகில் வைத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். எதற்காக இவை பயன்படுத்தபடுகின்றன என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவை மின்னணு சார்ந்த தளவாடங்களாக இருப்பதால், பெரிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் ரேடியோ டிரான்ஸ் மீட்டர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மீனவர் வலையில் மர்ம பொருட்கள் கிடைத்த சம்பவம் பழவேற்காடில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த, 2ம் தேதி, பழவேற்காடு முகத்துவாரம் கரையில், நிலஅதிர்வை கண்டறியும் மிதவை கருவி ஒன்று கரை ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது, மீனவர் வலையில் மர்ம பொருட்கள் சிக்கி உள்ளன.