திருவள்ளூரில் வரும் 18ல் ஆட்சி மொழி பயிலரங்கம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஆட்சி மொழிப் பயிலரங்கம் வரும் 18, 19ம் தேதிகளில் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரசு அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்ஆண்டுதோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு துறை அலுவலகங்கள், வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டு பேர் இதற்கு முன், இப்பயிற்சிகளில் பங்கேற்காத உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் நிலையிலுள்ள பணியாளர்கள் இரண்டு நாள் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.பயிலரங்கத்தின் வாயிலாகல ஆட்சிமொழி திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படும்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்.இதில், கோட்டம், மாவட்டம், வட்டம் மற்றும் சார் நிலைகளில் உள்ள பல்வேறு துறை அலுவலக ஊழியர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.