| ADDED : மார் 21, 2024 12:10 AM
பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரியில் தனியார் கட்டடம் ஒன்றில்,பா.ஜ., கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கட்சியின் மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியினருக்கு தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில், பொன்னேரி சட்டசபை தொகுதி பார்வையாளர் ஜானகிராமன், மாவட்ட செயலர் நந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 15 இளம் வழக்கறிஞர்கள் தங்களை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை மாநில துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வந்து கட்சி கொடிகள், பேனர், பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டதற்கான அனுமதி உள்ளதா எனக் கேட்டனர்.இதையடுத்து, கட்சியினர் நேற்று முன்தினம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் தெரிவித்து உள்ளோம் எனக் கூறினர். உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தக் கூடாது. கலைந்து செல்லும்படி பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.இதனால், அதிகாரிகள் மற்றும் பா.ஜ.,வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'இது தேர்தல் அலுவலகம் அல்ல. கட்சி அலுவலகம்' எனக் கட்சியினர் கூறினர்.அதற்கு அதிகாரிகள், 'தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என அறிவுறுத்தினர். இதையடுத்து, அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துவிட்டு, கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.