திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
திருத்தணி: திருத்தணி அரசு தொடக்க பள்ளியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி துவங்கியது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தமிழ்நாடு அரசு பசுமை இயக்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் மனிதா அறக்கட்டளை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து, 6 கோடி பனை விதைகள் நடும் பணியை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் சமீபத்தில் துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் ஊராட்சி, இஸ்லாம் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நேற்று பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகம் பங்கேற்று, மாணவர்களுடன் பனை விதைகள் நடவு செய்தார். தொடர்ந்து, கிராமத்தில் உள்ள நீர்நிலைகள், ஏரிக்கரை உள்ளிட்ட இடங்களில், மாணவர்கள் பனை விதைகளை நடவு செய்தனர். தன்னார்வலர்கள், கிராம தரிசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில், பனை விதைகளை நடவு செய்தனர்.