ஏரிக்கரையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
ஆர்.கே.பேட்டை:ஏரியின் கரையில் கொட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால், இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அஸ்வரேவந்தாபுரம் கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி அமைந்துள்ளது. ஆறு ஆண்டுகளாக இந்த ஏரி தொடர்ந்து நிரம்பி வருகிறது. தற்போதும் ஏரி நிரம்பிஉள்ள நிலையில், உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. இந்த கலங்கல் பகுதியை ஒட்டி, ஊராட்சியின் குப்பை கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது. இதனால், ஏரியில் உள்ள தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும், சுற்றுப்பகுதியில் செயல்பட்டு வரும் நடைபாதை உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளும் ஏராளமாக குவிந்துள்ளன. இதனால், இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குப்பையை முறையாக கையாள வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.