சோழவரம் சுங்கச்சாவடியில் பா.ம.க.,வினர் போராட்டம்
சோழவரம்: சோழவரம் சுங்கச்சாவடியில் பா.ம.க.,வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில், கடந்த 10ம் தேதி, பூம்புகாரில் மகளிர் மாநாடு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பா.ம.க.,வினர் பங்கேற்றனர். மாநாட்டிற்கு சென்று விட்டு, நள்ளிரவு திரும்பும்போது, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்த மறுத்த நிலையில், ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டோல்கேட் ஊழியர்களிடம் பேசி வாகனங்களை அனுப்பி உள்ளனர். இந்நிலையில், நே ற்று முன்தினம் இரவு, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரவிராஜ் தலைமையில், அக்கட்சியினர், சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அதையடுத்து பா.ம.க.,வினர் கலைந்து சென்றனர்.