உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு வாங்க மறுப்பு: பழங்குடியினர் தவிப்பு
பொன்னேரி:பொன்னேரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், கணிணி சான்று கேட்டு வந்தவர்களின் மனுக்களை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், பழங்குடியின மக்கள் தவிப்பிற்கு ஆளாகினர். பொன்னேரி நகராட்சியில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. இதில், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டன. பொன்னேரி பகுதியை சேர்ந்த சிலர் பழங்குடியின சாதி சான்று கேட்டு வந்தபோது, அவர்களிடம் அதிகாரிகள் மனு பெற்றுக்கொள்ள மறுத்ததால், அவர்கள் விரக்தி அடைந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த, 2018ல் வருவாய்த்துறை சார்பில், பழங்குடியின சான்று பெற்றுள்ளோம். தற்போது, பள்ளி படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய சான்று தேவைப்படுகிறது. இதற்காக பல முறை விண்ணப்பித்தும், புகைப்படத்துடன் கூடிய கணினிவழி சாதி சான்று வழங்கவில்லை. இங்கு முகாமில் மனு அளித்தால், அதிகாரிகள் பெற மறுக்கின்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முகாமிற்கு வந்த பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகரிடம் சான்று கேட்டு வந்திருந்தவர்கள் முறையிட்டனர். சப் - கலெக்டரிடம் பரிந்துரைத்து சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதியளித்தார்.