அரசு கட்டடம் படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரில் சோளிங்கர் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தின் முகப்பில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பழைய கட்டடம் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த கட்டடம் கைவிடப்பட்டு, அந்த வளாகத்தின் பின்பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.தற்போது. புதிய கட்டடம் செயல்பட்டு வரும் நிலையில், பழைய கட்டடம் எந்தவித பராமரிப்பும், பயன்பாடும் இன்றி பாழடைந்து கிடக்கிறது. கட்டடத்தின் மேல்தளத்தில் முளைத்துள்ள மரக்கன்றுகள், தற்போது மரங்களாக வளர்ந்து வருகின்றன. இதனால், கட்டடம் விரைவில் உறுதிதன்மையை இழந்து, இடிந்து விழும் அபாயம் உள்ளது.மேலும், இந்த கட்டடத்திற்கு பின்புறம் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் புதிய கட்டடத்திற்கு சீரான பாதை வசதியும் ஏற்படுத்த முடியாமல் உள்ளது. எனவே, பழைய கட்டடத்தை இடித்து அகற்றினால் மட்டுமே, நேரான பாதை வசதியை ஏற்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.