சாலை சீரமைப்பில் அலட்சியம் திருமழிசை பகுதிவாசிகள் அவதி
திருமழிசை:திருமழிசை பகுதியில் சாலை சீரமைப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.திருமழிசை பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது 10வது வார்டு. இப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு பணி துவங்கி நடந்து வந்தது.கடந்த ஏழு மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்புவாசிகள் நடந்துகூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.