குடிநீர் கேட்டு பண்ணுாரில் சாலை மறியல்
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார்.இங்குள்ள அந்தோணியார்பும் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 தினங்களாக குடிநீர் இல்லாமல் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதிவாசிகள் நேற்று காலை 7:30 மணியளவில் மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஊராட்சி செயலர் வேல்முருகன் பகுதிவாசிகளிடம் பேச்சு நடத்தினார். குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.