முன்னாள் கவுன்சிலருக்கு கத்தி வெட்டு அரசு மருத்துவமனை முன் சாலை மறியல்
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே, தேர்தல் முன்விரோதம் காரணமாக, முன்னாள் கவுன்சிலர் கத்தியால் வெட்டப்பட்டார். அவரது உறவினர்கள், நேற்று, அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.கடம்பத்துார் ஒன்றியம், அதிகத்துார் ஊராட்சி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 42., ஊராட்சியின் முன்னாள் 3வது வார்டு கவுன்சிலர். இவருக்கும் அதே ஊராட்சியின் முன்னாள் தலைவர் சரவணன் மகன் சேகுவாரா என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது.இந்த நிலையில், கடந்த 6ம் இரவு, தனியாக இருந்த ஜெகதீஷை,சேகுவாரா, நண்பருடன், கத்தியால் வெட்டி, உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர்.இதையடுத்து, பலத்த காயமடைந்த ஜெகதீஷ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில், கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த நிலையில், மருத்துவர்கள் நேற்று ஜெகதீஷை, 'டிஸ்சார்ஜ்' செய்தனர். தனக்கு முறையான சிகிச்சை அளிக்காததோடு, குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை எனக் கூறி, உறவினர்கள், திருவள்ளூர் -- பூந்தமல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் நகர போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் 'புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. சிகிச்சையில் உள்ளவரை உடனடியாக 'டிஸ்சார்ஜ்' செய்தது ஏன்' என, சரமாரியாக கேள்விகேட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக துாக்கி போலீஸ் வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.