மேன்ஹோல் சேதமடைந்து மரண குழியான சாலை
கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியே தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில், தொடுகாடு பகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது, ஸ்ரீபெரும்புதுாரில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.மேலும், பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்து மரணகுழிகளாக மாறியுள்ளது. இப்பகுதியில் காவல்துறை சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டும் வாகன ஒட்டிகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு போக்குவரத்து நெரிசலிலும் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர மருத்துவ தேவைக்கு இவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்வதில் கூட கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.