பகலில் கொளுத்தும் வெயில் இரவில் கடும் பனிப்பொழிவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதி யில், பகல் நேரத்தில் வெயில் அதிகரித்து காணப்படும் நிலையில், அதற்கு நேர்மாறாக இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், ஒரு வாரத்திற்கு முன் வரை, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. அடுத்தடுத்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், ஒரு வாரமாக மழையின்றி, பகல் நேரத்தில் வெயில் அதிகரித்து காணப் படுகிறது. இந்த சூழலில், சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், கும்மிடிப்பூண்டி பகுதியில் பகல் நேரத்தில் கொளுத்தும் வெயில், இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு என, மார்கழி மாத வானிலையை உணர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பகல் நேர வெயிலும், இரவில் பனிப்பொழிவும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக வழி வகுக்கும். அதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது.