குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது
திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் அருகே குடிபோதையில், தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ், 52. விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ஜஸ்டீன், 27. கட்டட மேஸ்திரி. சில மாதங்களாக ஜஸ்டீன் சரியாக வேலைக்கு செல்லாதது, மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் தந்தை அருள்தாஸ் உடன் தகராறு இருந்து வந்துள்ளது. ஜஸ்டின் மது போதையில் இருந்த போதெல்லாம் தந்தையை தாக்குவது தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஜஸ்டீன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அதை தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜஸ்டீன், வீட்டில் கிடந்த அரிவாளால் தந்தை அருள்தாஸின் தலையில் வெட்டினார். இதில் அவர் இறந்தார். தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜஸ்டீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.