ஆதிதிராவிடர் நலப்பள்ளி வளாகம் ஆட்டோ ஸ்டாண்டாக மாறிய அவலம் புதிய கட்டடம் அமைவது எப்போது?
பொன்னேரி,:ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டதை தொடர்ந்து, புதிய கட்டடம் அமையாததால், அந்த வளாகம் ஆட்டோ ஸ்டாண்டாக மாறி வருகிறது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் சேதமடைந்து இருந்தததால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கடந்தாண்டு இடித்து அகற்றப்பட்டது. தற்காலிகமாக அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைக்கு மாணவர்கள் மாற்றப்பட்டனர். இப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு ஓராண்டான நிலையில், தற்போது வரை புதிய கட்டடம் கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பள்ளி வளாகம், ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே, ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.