உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக... விரிவாக்கம்!:முதற்கட்ட பணிகளுக்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு

திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக... விரிவாக்கம்!:முதற்கட்ட பணிகளுக்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு

திருத்தணி:திருத்தணி -- சோளிங்கர் நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக உள்ளதால்,போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடந்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் திருத்தணி -- ஆர்.கே.பேட்டை எல்லை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு திட்டமிட்டு, முதலில், தலையாறிதாங்கல்-- பீரகுப்பம் வரை, 4 கி.மீ., துாரம், 22 கோடி ரூபாயில் சாலை அமைப்பதற்கு, வரும் 18ம் தேதி டெண்டர் விடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர் மொத்தம், 213 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை பராமரித்து வருகின்றனர். சாலைகளை தரம் உயர்த்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்தல் மற்றும் சாலைகள் பழுது பார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.திருத்தணியில் இருந்து, ஆர்.கே.பேட்டை எல்லை வரை மொத்தம், 23 கி.மீ., துாரம் நெடுஞ்சாலையை திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.இந்த நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இரு வழிச்சாலை

மேலும், விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு இச்சாலையாக வழியாக கொண்டு செல்கின்றனர். இரு வழிச்சாலையாக உள்ளதாலும் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் திருத்தணி -- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், ஆர்.கே.பேட்டை எல்லை வரை, அதாவது திருவள்ளூர் மாவட்ட எல்லை வரை, 23 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றி, அதில் மீடியன் அமைக்கவும் முடிவு செய்து, தற்போது அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை நிரந்தரமாக தவிர்க்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருத்தணி --- ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள், சாலையோரம் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடக்கிறது. இதைத் தடுக்கும் வகையில், 23 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்ற உள்ளோம். இந்த பணிக்கு, 100 கோடி ரூபாய் தேவைப்படும் என திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.தற்போது முதற்கட்டமாக தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை, 4 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, 22 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அராசணையும் மூன்று மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.இம்மாதம், 18 ம் தேதி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 16 மாதத்திற்குள் நான்கு வழிச்சாலையாக மாற்றி பயன்பாட்டிற்கு விடப்படும். மீதமுள்ள, 19 கி.மீ., துாரமும் நான்கு வழிச்சாலையாக படிப் படியாக மாற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.திருத்தணி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் -டி.ரகுராமன் கூறியதாவது:தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை, 7 சிறுபாலங்கள் அகலப்படுத்தியும், 2 சிறுபாலங்கள் புதுப்பிக்கபடவும் உள்ளது. தற்போது, 7 மீட்டர் அகல சாலை உள்ளதை, 16.2 மீட்டர் அகல சாலையாக மாற்றப்படும். இதில்,1.2 மீட்டர் சென்டர் மீடியன், நடைபாதை அமைக்கப்படும்.

சாலை அமைக்கும் முறை

நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு மொத்தம், 20 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். இதில், 15 மீட்டர் அகலத்திற்கு தார்ச்சாலையும், 2.1 மீட்டர் அகலத்தில் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய், 0.4 மீட்டர் அகலத்தில் இருபுறமும் தார்ச்சாலையின் சாய்வுதளம் அமைக்கப்படும். மழைநீர் வடிகால்வாய் என்பது குடியிருப்பு பகுதிகள் மற்றும் பஜார் போன்ற இடங்களில் மட்டும் அமையும். மீதமுள்ள இடத்தில் சாலை அகலப்படுத்தப்படும்.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !