வரத்து அதிகரிப்பால் திருவள்ளூரில் சரிந்தது தக்காளி, வெங்காயம் விலை
திருவள்ளூர்:தினமும் அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சில நாட்கள் முன், 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து குறைவால் விலையேற்றம் இருந்ததாக வியாபாரிகள் கூறி இருந்தனர்.இந்நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி 15 - 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.வெங்காயம் விலை 25 - 45 ரூபாய் வரை விற்பனையாகிறது.அதேநேரம், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் மற்றும் வெங்காயம் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று, திருவள்ளூர் பகுதியில் சரக்கு வாகனங்களில், ரூ.100க்கு 4 கிலோ தக்காளியும், ரூ.100க்கு 3 கிலோ வெங்காயமும் விற்பனை செய்யப்பட்டது. இதை பகுதிவாசிகள் மற்றும் சாலையில் செல்வோர் வாங்கி சென்றனர்.அடுத்து வரக்கூடிய நாட்களில், தக்காளி விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.