டிரங் சாலையில் ஆக்கிரமிப்பு நெரிசலால் தினமும் சிரமம்
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியின் பிரதான சாலையாக டிரங் சாலை உள்ளது. இந்த சாலையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம், நீதிமன்றம், நகராட்சி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி, சார்பாதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்கள் இந்த சாலையின் அருகருகே அமைந்துள்ளன. இந்த சாலையில் அதிக வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் வெளியே இருந்த சாலையில் உள்ள வணிக கடைகள், உணவகங்களுக்கு வரும் வாகனங்கள், பயணியர்களை ஏற்றிச்செல்லும் தனியார் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று வெளியேற அவதிக்குள்ளாகின்றனர். தினமும் நெரிசல் ஏற்படுகிறது.டிரங் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தனியார் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.