உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீரமைக்கப்படாத தடுப்பணை மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

சீரமைக்கப்படாத தடுப்பணை மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

பொன்னேரி:சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால், நடப்பாண்டும் மழைநீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், பொன்னேரி அடுத்த பரிக்குப்பட்டு கிராமத்தில், ஓடை கால்வாயின் குறுக்கே, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக தடுப்பணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் தடுப்பணையில் தேங்கும் மழைநீர், விவசாயத்திற்கு பயன்படுவதுடன், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் உதவியது. தொடர் பராமரிப்பு இல்லாததால், மூன்று ஆண்டுகளுக்கு முன் தடுப்பணையின் கான்கிரீட் கட்டுமானங்கள் சிதைந்தும், சரிவுகளில் பதிக்கப்பட்ட கற்கள் சிதறியும், ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், மூன்று ஆண்டுகளாக மழைக்காலங்களில் தண்ணீர் முழுதும் உடைப்புகள் வழியாக வெளியேறி வீணாகியது. தடுப்பணையை புதுப்பித்து, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நடப்பாண்டும் தடுப்பணையில் மழைநீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இனி வரும் காலங்களிலாவது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை