பங்காரு கால்வாய் பராமரிப்பில் நீர்வள துறை... அலட்சியம் : செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வருவதில் சிக்கல்
திருமழிசை:திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் ஜமீன்கொரட்டூர் பகுதியில், கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணையில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் பங்காரு கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால் குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் கால்வாயாகவும் மாறியுள்ளது. சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாலும், ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், சத்தரை, அகரம், அதிகத்துார், மணவாளநகர், புதுச்சத்திரம், அரண்வாயல், மதுரவாயல், கோயம்பேடு வழியாக, சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கிறது.இந்த கூவம் ஆற்றில் ஜமீன் கொரட்டூர் பகுதியில் இருந்த தடுப்பணை, 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. இதையடுத்து, 2021ல் 29 கோடி ரூபாயில், 110 மீட்டர் நீளத்தில் தடுப்பணையும், இருபுறமும் தலா, 15 மீட்டர் நீளத்தில் கதவணையும் சேர்த்து, மொத்தம் 140 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.இதில், கூவம் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் செல்லும் வகையிலும், அணைக்கட்டு பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டால், பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெள்ள நீர் செல்லும் வகையிலும், 8.5 கி.மீ.,யில் பங்காரு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய் புதுச்சத்திரம் பகுதியிலிருந்து ஜமீன்கொரட்டூர், நேமம், வெள்ளவேடு, குத்தம்பாக்கம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் உள்ளது. தற்போது, போதிய பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.மேலும், ஜமீன் கொரட்டூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கிய கால்வாய், செங்கல் சூளைக்கு பாதையாக மாறியுள்ளது. அதேபோல், புதுச்சத்திரம் முதல் வெள்ளவேடு வரை பங்காரு கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதோடு செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாயை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பங்காரு கால்வாய் வெள்ளவேடு உட்பட சில இடங்களில் குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் வழிந்தோடும் கால்வாயாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, பங்காரு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் செடி, கொடிகளை அகற்றி, மழைநீர் செல்லும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பங்காரு கால்வாய் பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதியுதவி வந்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் பங்காரு கால்வாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- நீர்வளத்துறை அதிகாரி,செம்பரம்பாக்கம்.