பிணையில்லா கடன், பயிர் காப்பீடு என்னாச்சு? சிறுதானிய விழாக்கள் நடத்துவதால் பயனில்லை!
திருவாலங்காடு, :தமிழகத்தில் சிறுதானிய பயிர்களுக்கும் பிணையில்லா கடன், பயிர் காப்பீடு, விதை மானியம் உள்ளிட்ட சலுகைகள் அளித்தால் தான், அவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்த முடியும். அதை விடுத்து சிறுதானிய திருவிழாக்கள் நடத்துவதால் பயனில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் 2023ல், ஐந்தாண்டு கால சிறுதானிய இயக்கம் அமலானது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்தூர், புழல் உட்பட 14 ஒன்றியங்களில் சிறுதானியங்கள் பயிரிடுவோர் அதிகரித்தனர்.தொடர்ந்து, ஆண்டுதோறும் சிறுதானிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தரிசு நிலங்களைச் சீரமைத்து, 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி செய்ய திட்டமிட்டு, விவசாயிகளை ஒன்றிணைத்து, 100 சிறுதானிய உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு பயிற்சி அளித்து, சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டது. சாகுபடி பரப்பு அதிகரிப்பை ஊக்குவித்தல் போன்றவை முக்கிய நோக்கம். ஆனால், சிறுதானிய திருவிழாக்களால் பயனில்லை என்கின்றனர்.இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள், வறட்சி காலங்களில் சாதாரண மண்ணிலும் நன்கு வளரக்கூடியவை. இந்த பயிர்களை அறுவடை செய்வது மிக கடினம். வேளாண் பொறியியல் துறை வாயிலாக மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்க வேண்டும்.மற்ற பயிர்களை போல இதற்கும் பிணையில்லா கடன், விதை மானியம் போன்றவை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றை செய்யாமல் சிறுதானிய திருவிழாக்கள் நடத்துவதால் எந்த பயனும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.