தி.மு.க., வாக்குறுதி என்னாச்சு? அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டம்
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து அலகுகளில், 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று, ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வடசென்னை அனல் மின்நிலைய கிளையின் சார்பில் நடந்த போராட்டத்தில், ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக, கடந்த 2021 தி.முக., அளித்த தேர்தல் வாக்குறுதி எண்: 153ன்படி, கோரிக்கையை நிறைவேற்ற வேணடும்.கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல், அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனல் மின் நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்தை திரும்ப பெற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், 2026 சட்டசபை தேர்தலை, ஒப்பந்த தொழிலாளர்கள் புறக்கணித்து, தி.மு.க., அரசுக்கு பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.