மப்பேடு சுகாதார வளாகம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
மப்பேடு, மப்பேடு ஊராட்சியில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து 12 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள தண்டலம் - அரக்கோணம், மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், மப்பேடு காவல் நிலையம் எதிரே கடந்த 2013ம் ஆண்டு 4.50 லட்சம் ரூபாயில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதோடு, குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் மதுக்கூடமாக மாறியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.