குறுவட்டம் வாரியாக ஆதார் மையம் அமையுமா?
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் திருவாலங்காடு, மணவூர், கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருத்தணி, செருக்கனூர் உள்ளிட்ட ஆறு குறுவட்டங்களில், 87 வருவாய் கிராமங்கள் உள்ளன.அதிக மக்கள் தொகையை உள்ளடக்கிய இந்த தாலுகாவில், அரசின் பல்வேறு இ - -சேவைகளை பெற, போதிய மையங்கள் இல்லை. அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தற்போது, திருத்தணி தாலுகா அலுவலகத்திலுள்ள இ - -சேவை மையம், தலைமை தபால் நிலையம், நகராட்சி அலுவலகம் மற்றும் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே, ஆதார் அட்டை குறித்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில், தினமும் 25க்கும் குறைவான டோக்கன்கள் மட்டும் வினியோகிக்கப்படுகிறது.இதனால், தொலைதுார கிராமங்களில் இருந்து வருவோர், தினமும் திருத்தணிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. மேலும், போதிய பேருந்து வசதி இல்லாத கிராமங்களைச் சேர்ந்தோர், அதிகாலை கிளம்பி, காலை 8:00 மணியில் இருந்து நகரிலுள்ள மையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது.குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவை, குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, தினமும் குழந்தைகளுடன் பெண்கள், நகருக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக, திருத்தணி தாலுகாவில் இச்சேவையை மேற்கொள்ளும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும், குறுவட்டம் வாரியாக ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.கிராமப்புறங்களில் காட்சிப்பொருளாக உள்ள இ - -சேவை மையங்களில், அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினாலும், பல ஆயிரம் கிராமவாசிகள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.பள்ளி விடுமுறை துவங்கியுள்ள நிலையில், மாணவ - மாணவியர் நலனுக்காக கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.