குறுகிய நெடுஞ்சாலை வளைவுகள் விரிவாக்கம் செய்யப்படுமா?
திருத்தணி, திருத்தணி - பொதட்டூர்பேட்டை மற்றும் கே.ஜி.கண்டிகை--- நொச்சிலி ஆகிய நெடுஞ்சாலைகளில், 24 மணி நேரமும் அதிகளவில் வாகனங்கள் செல்லும்.இருபுறமும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகர சாலை வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு, சாலையோரம் செடிகள் வளர்ந்து குறுகிய சாலையாக உள்ளது. இதனால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக திருத்தணி--- பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில், 15 இடங்களில் சாலை வளைவுகள் உள்ளன. இச்சாலை யில் தினசரி குறைந்தபட்சம் வளைவுகளில் ஒரு விபத்தாவது நடக்கிறது.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஓய்.வேணுகோபால் கூறியதாவது:கே.ஜி.கண்டிகையில் இருந்து நொச்சிலி வழியாகஅத்திமாஞ்சேரி பேட்டை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பத்து இடங்களில் வளைவுகள் உள்ளன. வளைவுகளில் சாலை குறுகலாக உள்ளதால் விபத்து நடக்கிறது. விவசாயிகள் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர் மற்றும் லாரிகள் வளைவுகளில் அடிக்கடி கவிழ்ந்து விடுகிறது.எனவே, நெடுஞ்சாலை துறையினர் நெடுஞ்சாலை வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.