| ADDED : ஜூலை 12, 2011 12:26 AM
பெரியதாழை : தட்டார்மடம் அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கிராம மக்கள் வைத்த மனுவின் மீது அமைச்சர் சண்முகநாதன் எடுத்த நடவடிக்கையால் மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது.திசையன்விளையிலிருந்து இடைச்சிவிளை, பூச்சிக்காடு, மேட்டுவிளை, காமராசர்நகர், சிவசுப்பிரமணியபுரம், தட்டார்மடம் விலக்கு வழியாக அரசு பஸ் (தடம் எண் 107) சென்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் திடீரென எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த 3 வருடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் போக்குவரத்து வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் நன்றி தெரிவிக்க வந்த தொகுதி எம்எல்ஏ.,வும், அமைச்சருமான சண்முகநாதனிடம் நிறுத்தப்பட்ட இந்த அரசு பஸ்சை மீண்டும் இதே வழி தடத்தில் இயக்ககோரி கிராம மக்கள் முறையிட்டனர். உடன் அமைச்சர் இது தொடர்பாக நெல்லை அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் தொடர்பு கொண்டு பேசி மீண்டும் பஸ்சை இயக்கிட உத்தரவிட்டார். இதன் பேரில் கடந்த 7ம் தேதியன்று தடம் எண் 107, அரசு பஸ் மீண்டும் இதே வழிதடத்தில் இயக்கப்பட்டது. மேட்டுவினையில் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கணபதி, துணைச் செயலாளர் கதிரவஆதித்தன், பாலசுந்தர், ஒன்றிய அதிமுக.,செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் இந்த பஸ்சை வரவேற்றனர். பஸ்சை மீண்டும் இயக்கிட உதவிய அமைச்சருக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.