ரசாயன ஆலை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.37 லட்சம் இழப்பீடு
துாத்துக்குடி: துாத்துக்குடி ரசாயன தொழிற்சாலையில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.37 லட்சம் வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.துாத்துக்குடி முத்தையாபுரத்தில் ஸ்பிக் தொழிற்சாலையின் துணை நிறுவனமான டாக் ரசாயன ஆலை உள்ளது. நேற்று முன்தினம் ஆலையில் அமோனியா வாயு கசிவில்சாயர்புரம் மஞ்சள்நீர் காயலை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி ஹரிஹரன் 24, பலியானார். மேலும் நான்கு பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த ஹரிஹரன் குடும்பத்தினர் உரிய இழப்பீடு கேட்டு துாத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹரிஹரன் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் உடனடியாக வழங்கினர். பின் தேதியிட்ட ரூ.10 லட்சம் காசோலையும் உடனடி செலவுக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 37 லட்சம் வழங்கப்படுகிறது. அவரது குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கவும் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து குடும்பத்தினரின் போராட்டம் முடிவுக்கு வந்தது. உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.