உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பிரதமரை விமர்சித்த மா.கம்யூனிஸ்ட்; தட்டிக்கேட்ட பா.ஜ.,வினருக்கு அடி

பிரதமரை விமர்சித்த மா.கம்யூனிஸ்ட்; தட்டிக்கேட்ட பா.ஜ.,வினருக்கு அடி

துாத்துக்குடி:பிரதமர் மோடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் அவதூறாக பேசியதால், வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வின் போது பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க, இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரத்தின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு, துாத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள, அவருடைய சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், மாலை அணிவித்த பின், மக்கள் ஒற்றுமை பிரசார இயக்கத்தை துவக்கி வைத்து பேசினர். சி.ஐ.டி.யு., மாநில செயலர் ரசல் பேசும்போது, ''இந்திய பொருளாதார இறையாண்மை சீரழிந்து விட்டது. அதற்கு காரணம் பிரதமர் மோடிதான்,'' என பேசினார். இதை கேட்டதும், அங்கு கூடி இருந்த பா.ஜ., நிர்வாகி சொக்கலிங்கம், ரசல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின், அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கினார். அதை கண்ட கம்யூ., நிர்வாகிகள் பேச்சிமுத்து, நாகராஜ் உள்ளிட்டோர், சொக்கலிங்கத்தை தாக்கினர். இதற்கு எதிராக பா.ஜ.,வினர், கம்யூ., கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்னை செய்ய, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, இரு கட்சியினரும் மோதிக் கொண்டனர். பா.ஜ., மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டு மா. கம்யூ. கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதற்குள் அந்தப் பகுதிக்கு போலீசார் வந்தனர். இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி