காரில் தொழிலதிபரை கடத்திய தி.மு.க., நிர்வாகிகளுக்கு காப்பு
துாத்துக்குடி: தொழிலதிபரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., நிர்வாகிகள் மூவரை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், சிதம்பரநகரை சேர்ந்தவர் உலகநாதன், 54; ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக, கோமதிபாய் காலனியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி சரவணன், 44, என்பவரிடம், 20 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்ற நிலையில், 6 லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகைக்கு கொடுத்த செக், வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப பெறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, தனசேகரன்நகர் பூங்காவில் நடைபயிற்சி சென்ற உலகநாதனை சிலர் தாக்கி, 'இன்னோவா' காரில் கடத்தி, பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். சிப்காட் போலீசார் உலகநாதனை மீட்டு, சரவணன், அவரது தம்பி பாலமுருகன், தி.மு.க., நிர்வாகி அண்ணாநகரை சேர்ந்த ஜெயராஜ், 38, ஆகியோரையும் நேற்று கைது செய்தனர்.