போலீசார் தாக்கியதாக தீக்குளித்தவர் மரணம்: உடலை வாங்க மறுப்பு
துாத்துக்குடி:போலீசார் தாக்கியதாக கூறி தீக்குளித்த தொழிலாளி நேற்று உயிரிழந்தார். காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.துாத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சைரஸ், 56. கூலித் தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் தகராறு இருந்துள்ளது. கடந்த 19 ம் தேதி இரவு மது அருந்திய ஆனந்த சைரஸ் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.சிப்காட் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 4 போலீசார் ஆனந்த சைரஸிடம் விசாரணை நடத்தி எச்சரித்துள்ளனர். போலீசார் வந்ததை அறிந்ததும் வேலைக்கு சென்ற ஆனந்த சைரஸின் மனைவி சரோபினா வீடு திரும்பியுள்ளார்.அப்போது, போலீசார் ஆனந்த சைரஸை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 108 ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மாட்டோம் என குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனந்த சைரஸ் மனைவி சரோபினா கூறியதாவது: விசாரிக்க வந்த போலீசார் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் முன்னிலையில் திடீரென எனது கணவர் ஆனந்த சைரஸை தாக்கினர். வாய் பகுதியில் கம்பால் தாக்கிய அவர்களை நான் கண்டித்தேன். குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பிவிடுவதாக அவர்கள் அச்சுறுத்தினர்.கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் விட்டுவிடுகின்றனர். ஏழை என்பதால் எனது கணவரை கண்மூடித்தனமாக தாக்கினர். அவரை இழந்து நாங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து வருகிறோம். தாக்கிய போலீசார் மீதும் பொய் புகார்கள் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.