நிதி வேண்டாம்; நீதி வேண்டும்: ஆணவ கொலையில் நெருக்கடி
துாத்துக்குடி: வாலிபர் ஆணவ கொலையில், அரசு நிதியை வாங்க மறுத்து இரண்டாம் நாளாக, அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரான கவின் செல்வகணேஷ், 27, தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் ஆணவ கொலை செய்யப்பட்டார். பட்டியலினத்தை சேர்ந்த கவின், தன் சகோதரியை காதலிப்பதை விரும்பாமல் அவர் இக்கொடூர செயலில் ஈடுபட்டார். அவரை கைது செய்த போலீசார், சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். சுர்ஜித் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி, கவினின் உறவினர்கள் இரண்டாவது நாளாக நேற்று உடலை வாங்க மறுத்தனர். சுர்ஜித் பெற்றோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கவின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்தனர். கவின் குடும்பத்தாருக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரண தொகையை அதிகாரிகள் வழங்கினர். சுர்ஜித் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே, நிவாரண தொகையை பெறுவோம் என தெரிவித்து, அதையும் நிராகரித்தனர்.