போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது
நாட்றம்பள்ளி:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சபரி, 29. இவர், சென்னையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். பொங்கல் விழாவை கொண்டாட, சொந்த ஊருக்கு சில நாட்களுக்கு முன் வந்தார். கடந்த, 15ம் தேதி அவருக்கும், அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த திருமலை வாசன், 25, விஜய், 28, புஷ்பாராஜி, 25, ஆகியோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், மூன்று வாலிபர்களும் சேர்ந்து, கல்லால் தாக்கியதில் போலீஸ்காரர் சபரி படுகாயமடைந்தார். மூன்று வாலிபர்களை, நாட்றம்பள்ளி போலீசார் நேற்று கைது செய்தனர்.