கள்ளத்தொடர்பை துண்டித்த கோபம் தம்பதியை வெட்டிய ஐவருக்கு காப்பு
திருப்பத்துார்:கள்ளக்காதலை கைவிட்ட ஆத்திரத்தில், நள்ளிரவில் நண்பர்களுடன் சென்று கள்ளக்காதலியை நிர்வாணப்படுத்தியும், கத்தியால் வெட்டியும், 15 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.திருப்பத்துார் அடுத்த ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன், 31; கார் டிரைவர். பிப்., 3ம் தேதி நள்ளிரவில், அவரது வீட்டிற்கு முகமூடி அணிந்து காரில் வந்த ஐந்து பேர், வீரபத்திரன், அவரது மனைவி சத்யா, 28, ஆகியோரை கத்தியால் வெட்டினர். சத்யாவை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த அவர்கள், 15 சவரன் நகை, 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். குரிசிலாலப்பட்டு போலீசார், 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து, அந்த கும்பல் வந்த காரின் உரிமையாளர், வேலுார், காட்பாடியைச் சேர்ந்த சுரேஷ், 34, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், வீரபத்திரன், சுரேஷ் இருவரும் காட்பாடியில் ஒன்றாக தொழில் செய்து வந்தனர். அப்போது, காட்பாடியில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு இருந்த வீரபத்திரன் வீட்டிற்கு வந்து சென்றதில், சுரேஷ், சத்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.சத்யாவை கண்டித்தும் அவர் கேட்காததால், வீரபத்திரன் அவரை பிரிந்தார். சில மாதங்களில், சத்யாவின் தந்தை இறப்புக்கு காட்பாடி சென்ற போது, உறவினர்கள், தம்பதியை சேர்த்து வைத்தனர். சுரேஷ் தொடர்பை சத்யா கைவிட்டார். ஆத்திரமடைந்த சுரேஷ், தன் நண்பர்கள் ஜாபர், 36, கர்ணன், 34, உள்ளிட்ட ஐந்து பேரை, ராஜபாளையம் அழைத்துச் சென்று, தான் காரில் அமர்ந்துகொண்டு, உடன் வந்தவர்களை கொள்ளையில் ஈடுபட வைத்துள்ளார்.சுரேஷ் திட்டப்படி கர்ணன், சத்யாவை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததும், கொள்ளையடித்த நகைகளை நாகப்பட்டினத்தில் அடகு வைத்ததும் தெரியவந்தது. கர்ணன், சுரேஷ் உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஜாபரை தேடுகின்றனர்.