உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொபைல் போனுக்கு இலவச ரீசார்ஜ் மோடி பெயரில் மோசடி வலை  விரிப்பு

மொபைல் போனுக்கு இலவச ரீசார்ஜ் மோடி பெயரில் மோசடி வலை  விரிப்பு

திருப்பூர்:மக்களின் பேராசையை துாண்டிவிட்டு, நுாதன முறையில் தனிநபர் தகவல்களை திருடுவது, வங்கி கணக்கிலிருந்து பணத்தை லாவகமாக சுருட்டுவது போன்ற சைபர் குற்றங்கள் தொடர்கின்றன.அப்போதைய டிரென்டிங்கிற்கு ஏற்ப, புதுப்புது வகைகளில் வலைவிரித்து, பலரையும் ஏமாற்றி வருகின்றனர்.அவ்வகையில், லோக்சபா தேர்தல் முடிவடைந்து, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ளது. தற்போதைய இந்த சூழலை பயன்படுத்தி, ஒரு கும்பல், 'பி.ஜே.பி., ப்ரீ ரீச்சார்ஜ் யோஜனா' என கூறி, மோசடி வலை வீசிவருகிறது.'2024 தேர்தலில் அதிகபட்ச மக்கள் பி.ஜே.பி.,க்கு ஓட்டளித்ததால், பிரதமர் மோடி, அனைத்து இந்தியர்களுக்கும் மூன்று மாதம் மொபைல் போனுக்கு இலவச ரீச்சார்ஜ் வழங்குகிறார்; இதற்கான அவகாசம் அக்., 15ம் தேதியுடன் முடிவடைகிறது' என்ற செய்தியுடன், ஒரு இணையதள லிங்க்கை வாட்ஸாப்பில் பரவச் செய்து வருகின்றனர்.அந்த லிங்க், பிரதமர் மோடியின் படத்துடன், ஜியோ, ஏர்டெல், வோடபோன், பி.எஸ்.என்.எல்., இலவச ரீச்சார்ஜ் என குறிப்பிடப்பட்ட இணையதளத்துக்கு செல்கிறது. மக்களை நம்ப வைப்பதற்காக, பயனடைந்ததாக சிலரது போலி கமென்ட்களையும் சேர்த்துள்ளனர்.'ப்ரீ ரீசார்ஜ்' பட்டனை தொட்டதும், மொபைல் எண் மற்றும் தொலை தொடர்பு நிறுவனத்தின் பெயர் விவரங்களை பதிவு செய்யக் கோருகிறது. அடுத்தகட்டமாக, போலி இலவச ரீசார்ஜ் இணையதள லிங்க் மற்றும் மெசேஜை, தனிநபர் 10 பேர் அல்லது; 5 வாட்ஸாப் குழுக்களுக்கு பகிரச் செய்கின்றனர்.அவ்வாறு பகிரும்போது, 'அடுத்த 24 மணி நேரத்தில் இலவச ரீசார்ஜ் ஆக்டிவேட் ஆகிவிடும்; நெக்ஸ்ட் பட்டனை அழுத்துங்கள்' என்ற செய்தி தோன்றுகிறது. நெக்ஸ்ட் பட்டனை அழுத்தும்போது, வெவ்வேறு மோசடி இணையதளங்களுக்குள் அழைத்துச் செல்கிறது.மொபைல்போன் பரிசு விழுந்ததாக கூறி பெயர், இமெயில் முகவரி, பிறந்த நாள் விவரம், முகவரி உட்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய கோருகின்றனர், பின்புலத்திலிருந்து வலை விரிக்கும் மோசடி ஆசாமிகள்.விவரம் தெரிந்தோர், இதுவும் ஒருவகையான மோசடி வலை தான் என்பதை, இணையதள லிங்க்கை பார்த்த உடனேயே புரிந்துக் கொள்வர். சாதாரண மக்கள், இலவச ரீசார்ஜ் கிடைக்கிறது என நம்பி, தனிநபர் விவரங்களை வழங்கி தாங்கள் மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பகிர்ந்து, நண்பர்களும் மோசடி வலையில் சிக்குவதற்கு காரணமாகிவிடுகின்றனர்.ஆசை காட்டி மோசம் செய்யும் இதுபோன்ற மேசேஜ்கள், லிங்க்குகளை உடனடியாக 'டெலீட்' செய்து விடுவதே பாதுகாப்பானது என்கின்றனர் 'சைபர் கிரைம்' போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை