ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்ட60 ரோட்டில் பாதசாரிகள் பரிதாபம்; ஸ்மார்ட் ரோட்டில் ஏற்பட்ட சிக்கல்
திருப்பூர்; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அமைக்கப்பட்ட ரோடு, பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தள்ளுவண்டி கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரானந்தபுரம் பகுதியில்,'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஸ்மார்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி ரோட்டை தீயணைப்பு நிலையம் பகுதியிலிருந்து பி.என்., ரோட்டை இணைக்கும் வகையில் இந்த ரோடு அமைக்கப்பட்டுள்ளது.அதில், 60 அடி ரோட்டில், கான்கிரீட் ரோடு, பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை, அலங்கார விளக்குகள், மழை நீர் வடிகால் அமைப்பு, குடிநீர் குழாய் மற்றும் கேபிள்கள் செல்ல தனிப்பாதை ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், ஸ்மார்ட் ரோடு அமைக்கப்பட்டதன் நோக்கமே எள்ளளவும் நிறைவேறாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ரோட்டின் இரு புறங்களிலும் அமைந்துள்ள நடைபாதை முழுவதும் வரிசையாக ஏராளமான தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின், பொருட்கள் பிளாட்பாரத்தில் பரப்பி வைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் அமர இருக்கைகளையும் அமைத்துள்ளனர். இதுதவிர, விளம்பர போர்டுகள் ரோடு வரை இடம் பெற்றுள்ளன.இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக, பாதசாரிகள் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டியுள்ளது. மற்ற வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது.இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் என யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மாலை முதல் இரவு வரை அனைத்து கடைகளும், வாடிக்கையாளர் கூட்டத்துடன் பரபரப்பாக கடை வீதி போல் மாறி காட்சியளிக்கிறது.இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து பாதசாரிகள் நடைபாதையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.