மாணவர்களை ஊக்குவிக்க போட்டோவுடன் பாராட்டு; அரசு பள்ளியில் புதுமையான நடவடிக்கை
உடுமலை ; உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேர்வில் சிறப்பிடம் பெறுவோருக்கு புகைப்படம் ஒட்டி பாராட்டி மாணவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். உடுமலை நகரப்பகுதி மட்டுமில்லாமல், சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்தும் வந்து பயில்கின்றனர்.மாணவர்களை பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற செய்வதற்கும், படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவதற்கும், அரசு பள்ளிகளில் பல்வேறு நடைமுறைகளை கையாளுகின்றனர்.அதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளில், மாணவர்கள் ஈடுபாட்டுடன் படிப்பதற்கு புதிய நடைமுறையை பின்பற்றுகின்றனர்.வழக்கமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் பெயர்கள் மட்டுமே, பள்ளியின் அறிவிப்பு பலகையில் வைக்கப்படும்.இப்பள்ளியில் அதற்கு மாற்றாக, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவோரின் புகைபடம் அறிவிப்பு பலகையில் வைக்கப்படுகிறது.மற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதுடன், அவர்களுக்கான பாராட்டாகவும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு தயராகின்றனர்.பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் கூறியதாவது:மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர, அவர்களை தேர்வுக்கு தயாராக்குவதற்கு, மாணவர்களின் மனநிலையை மகிழ்வுடன் வைத்திருக்க வேண்டும்.இப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டியும், ஊக்குவித்தும் தான் அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துச்செல்கின்றனர்.இதில் ஒரு முயற்சிதான், தேர்வில் சிறப்பிடம் பெறுவோரின் புகைப்படம் வைப்பது. இது மாணவர்களிடம் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும். மேலும், அவர்களுக்கான ஒரு அங்கீகாரமாகவும் உள்ளது.இவ்வாறு கூறினார்.