உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சவால்களை முட்டும்வரை முட்டி சாதித்த திருப்பூர் வெற்றிக்கொடி கட்டு! ரூ.லட்சம் கோடி லட்சியம் எட்ட தொடரும் வீறுநடை

சவால்களை முட்டும்வரை முட்டி சாதித்த திருப்பூர் வெற்றிக்கொடி கட்டு! ரூ.லட்சம் கோடி லட்சியம் எட்ட தொடரும் வீறுநடை

திருப்பூர்:சூழ்ந்திருந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மே மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 11 ஆயிரத்து, 319 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. இதனால், ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை நோக்கிய திருப்பூரின் பயணம் வீறுநடையுடன் தொடர்கிறது.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், ஆண்டுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும் நடக்கிறது. அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் பனியன் தொழில் மூலமாக, லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.விலை உயர்வால் சரிவுஒவ்வொரு ஆண்டும், 10 முதல், 15 சதவீத வளர்ச்சி என்ற இலக்குடன் சென்று கொண்டிருந்த திருப்பூருக்கு, 2022ல் ஏற்பட்ட அபரிமிதான பஞ்சு விலை, தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியது. அபரிமிதமான பஞ்சு விலை உயர்வால், ஆர்டர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதனை தொடர்ந்து, உக்ரைன் - ரஷ்யா போர் சூழல், ஐரோப்பிய நாடுகளை சிக்கன நடவடிக்கையில் தள்ளியது. எதிர்பாராத வகையில், அமெரிக்காவில் உருவான பணவீக்கம், சில்லறை வர்த்தகத்தை பாதித்தது. இப்படி, பல்வேறு பாதிப்பால், திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் சரிவுநிலையில் தள்ளப்பட்டது.இயல்பு நிலை திரும்பியதுகடந்த, 2023ல், ஆண்டு முழுவதும் ஏற்றுமதி வர்த்தகம் சரிந்தது; கடும் போராட்டத்தால், ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, 13 மாதங்களுக்கு பின், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு சரிக்கட்டப்பட்டு, மீண்டும் வளர்ச்சி நிலை உருவாகியது. கடந்த, பிப்., மாதத்தில் இருந்து, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் படிப்படியாக உயரத்துவங்கியது.கொரோனா தொற்றுஇந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மே மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வடைந்துள்ளது. கடந்த, 2019-20 மே மாதம், 10 ஆயிரத்து, 661 கோடி ரூபாயாக இருந்தது; கொரோனா தொற்று பரவியிருந்த காலகட்டத்தில் (2020-21), 3,910 கோடி ரூபாயாக சரிந்தது.அடுத்து வந்த ஆண்டில் (2021-22), 8,110 கோடியாகவும், 2022-23ல் 10 ஆயிரத்து, 947 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. பருத்தி நுால் விலை உயர்வதலக, 2023-24ம் நிதியாண்டில், மே மாத ஏற்றுமதி, 10 ஆயிரத்து, 181 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.அதிகபட்ச ஏற்றுமதிஎதிர்கால வர்த்தகம் சிறக்க வேண்டுமெனில், ஏற்றுமதியாளர்கள் புதிய நடவடிக்கை எடுத்தனர். புதிய கண்காட்சிகளில் பங்கேற்று, திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி திறமைகளை விளக்கினர். 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தி சாதனைகளை பட்டியலிட்டதன் பயனாக, உலக நாடுகள் மீண்டும் இந்தியாவை நோக்கி வரத்துவங்கியுள்ளன. இதனால், ஐந்து ஆண்டில் இல்லாத அளவுக்கு, மே மாத ஏற்றுமதி உயர்ந்துள்ளது.அவ்வகையில், மே மாதம் மட்டும், 11 ஆயிரத்து, 319 கோடி ரூபாய் அளவுக்கு, நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது; பின்னலாடை வர்த்தகமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் சோதனையால் துவண்டு போயிருந்த பனியன் தொழில்துறையினர், இத்தகைய ஆக்கப்பூர்வமான தகவல்களால் உற்சாகம் அடைந்துள்ளனர்.தொடர் சோதனையால் துவண்டு போயிருந்த பனியன் தொழில்துறையினர், இத்தகைய ஆக்கப்பூர்வமான தகவல்களால் உற்சாகம் அடைந்துள்ளனர்

ஏற்றுமதியில் ஒரு 'மைல்கல்'

கடந்த ஓராண்டாக, இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. பஞ்சு, நுால் விலை நிலையாக இருந்தது. ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் வழக்கமான ஆர்டர் மட்டும் குறைந்தது. அதன்பின், அதிகரித்துள்ளது.கடந்த பிப்., மாதம், ஏற்றுமதி வர்த்தக ஒரு சதவீதம் உயர்ந்திருந்தது; அடுத்து, 4 சதவீதம் வரை உயர்ந்தது; கடந்த மே மாத நிலவரப்படி, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ஓர் 'மைல்கல்லாக' அமையும்.- பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sampath surya
ஜூன் 26, 2024 21:38

ஏற்றுமதியில் சாதித்தால் மட்டும் போதாது நாட்டு மக்களுக்கு எந்த நோய்களையும் சுகாதார சீர்கேட்டையும் விளைவிக்காமல் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்..... வெளிநாடுகளை விட நம் நாட்டில் விலைகளை குறைப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வாய்க்கால்களிலும் ஓடைகளிலும் கிணறுகளிலும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதே விவசாயம் செய்ய முடியவில்லை ஏகப்பட்ட புற்று நோய்கள் ஏகப்பட்ட உடல் நோய்கள் உயிர் வாழ்வதற்கு தகுதி இல்லாத நகரமாக மாறி வருகிறது. இதை இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டால் இந்தியாவை எப்போதும் காப்பாற்றவே முடியாது.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ