ஒரு ஆண்டுக்குப் பின் அமைந்தது உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம்
பல்லடம் : பல்லடத்தில், கடந்த ஒரு ஆண்டுக்குப் பின், உணவு பாதுகாப்புத் துறைக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.பல்லடம் தாலுகாவில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டாக அலுவலகமே இல்லாமல், உணவு பாதுகாப்புத்துறை இயங்கி வந்தது.இதுகுறித்து, ஜூலை 5ம் தேதி, 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் பதிப்பில் செய்தி வெளியானது.இதனால், உணவு பாதுகாப்புத்துறைக்கு அலுவலகம் தேடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.தற்போது, ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின், பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்தில், உணவு பாதுகாப்புத்துறைக்கு என, அறை ஒன்று ஒதுக்கப் பட்டுள்ளது.பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதற்கு, வட்டார அளவில் ஒரே ஒரு அலுவலர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலர்கள், உதவியாளர்கள் யாருமே இல்லாத நிலையில், கள ஆய்வு, வழக்கு விசாரணை, அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஒருவரே மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.இதனால், அலுவலகம் இருந்தாலும் அதனை பூட்டி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற நிலையும் உள்ளது.இதனால், புகார்கள் அளிக்க வரும் பொதுமக்களும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும். எனவே, அடிக்கடி அலுவலகத்தை மாற்றாமல், உணவு பாதுகாப்புத் துறைக்கு என, நிரந்தரமாக ஒரு அலுவலகத்தை அமைப்பதுடன், கூடு தலாக ஊழியர்களையும் நியமிக்க வேண்டும்.