மதுபான வேன் - கார் மோதல்: ஒருவர் பலி; மது பாட்டில்கள் சேதம்
திருப்பூர் : காங்கயத்தில், மதுபானம் ஏற்றி வந்த வேன் மீது, கார் மோதியதில், காரில் வந்த ஒருவர் இறந்தார். பத்து லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதமாயின.திருப்பூர் மாவட்டம், காங்கயம், வீராணம்பாளையத்தில் அரசு மதுபான கிடங்கு உள்ளது. கிடங்கில் இருந்து காங்கயம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை இறக்குவதற்கு, 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான லோடை, ஈரோடை சேர்ந்த வேன் டிரைவர் சோமசுந்தரம், 40, உதவியாளர்கள் சரவணக்குமார், 31, அஸ்வின், 21, கார்த்தி, 40 ஆகியோர் வேனில் ஏற்றி கொண்டு, காங்கயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.வீராணம்பாளையம், ஸ்ரீராம் நகர் அருகே, திருப்பூர் ஊத்துக்குளியில் தங்கி வேலை செய்யும், உத்தரப்பிரதேசத்தை நசீம், 38, முகமது பர்மன், 24 ஆகியோர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, வேனின் முன்புறம் மோதியது. இதில், வேன் ரோட்டின் மத்தியில் கவிழ்ந்து, பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் உடைந்து சேதமாயின. காரை ஓட்டி வந்த நசீம் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த வேன் டிரைவர் உட்பட, ஐந்து பேரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. இதனால், நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.